இந்தியா

மருத்துவமனையின் அலட்சியப்போக்கு - தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்

Sinekadhara

மருத்துவமனையின் அலட்சியத்தால் தாயின் மார்பிலேயே 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உடல்நலம் குன்றிய தங்களுடைய 5 வயது மகன் ரிஷியை சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் ஜபால்பூரிலுள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மணிக்கணக்கில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் அல்லது சுகாதார ஊழியர்கள்கூட சிறுவனுக்கு என்ன பிரச்னை என்று ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் வைத்தே பெற்றோர்கள் கண்முன் தாயின் மார்பில் சாய்ந்தபடி உயிரிழந்தார் சிறுவன் ரிஷி. சிறுவன் உயிரிழந்த பிறகும் சிலமணிநேரங்கள் அந்த சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இது அந்த மாநிலத்தின் மோசமான சுகாதார உள்கட்டமைப்பை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இந்த சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அந்த நேரத்தில் பணியிலிருந்த மருத்துவருக்கு உத்தரவிடப்பட்டது. அதில், மருத்துவரின் மனைவி முந்தைய நாள் உண்ணாவிரதம் இருந்ததால் அடுத்த நாள் மருத்துவமனைக்கு வர தாமதம் ஆனதாக கூறியுள்ளார் மருத்துவர்.