இந்தியா

5 மாநில தேர்தல்: 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை - பஞ்சாப்பில் அசத்திய ஆம் ஆத்மி

சங்கீதா

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகய 4 மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு, பொருளாதார மந்தம், விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றுக்கு இடையில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது.

நாட்டின் மிகப் பெரிய தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில், மீண்டும் ஆட்சியை தக்கவைக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக முனைப்பு காட்டியது. இந்நிலையில், இன்று 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. தொடக்கத்திலிருந்தே உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகிக்க துவங்கியது.

தற்போதைய நிலவரப்படி 403 உறுப்பினர்களை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 238 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி அங்கு உறுதியாகியுள்ளது. சமாஜ்வாதி கட்சி 100 இடங்களிலும், பகுஜன் 6 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

இதேபோல், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பாஜக 24 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தேசிய மக்கள் கட்சி 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில், பாஜக 43 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆட்சியை பிடிப்பதில் அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி 88 இடங்களிலும், ஆளும் காங்கிரஸ் 15 இடங்களிலும், பாஜக கூட்டணி 4 இடங்களிலும், அகாலிதளம் 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 59 இடங்களை தாண்டி, ஆம் ஆத்மி தனி பெரும் கட்சியாக அங்கு உருவெடுத்துள்ளது.