இந்தியா

ஈஷாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு 5 நாள் சிறப்பு யோகா வகுப்பு

Sinekadhara

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்பு ஜனவரி 25 முதல் ஜனவரி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உட்பட 88 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

DoPT (Department of Personnel and Training) என அழைக்கப்படும் இந்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, அதில் பணியாற்றும் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காக இந்திய மற்றும் சர்வதேச பயிற்சி மையங்களால் நடத்தப்படும் பல பயிற்சிகளை வழங்குகிறது. அதில் ஈஷாவின் ‘இன்னர் இன்ஜினீயரிங் லீடர்ஷிப்’பயிற்சியும் ஒன்றாகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசு அதிகாரிகள் ஈஷாவின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

அதன்படி, இந்தாண்டு நடந்த 5 நாட்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு ‘ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா’ என்ற சக்திவாய்ந்த யோகா பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன், உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கான எளிமையான யோகா பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அத்துடன், சத்குருவுடனான தியான அமர்வுகளிலும், கலந்துரையாடல் நிகழ்விலும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

அரசு அதிகாரிகள் மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை சரியாக கையாள்வது, உள்நிலையில் அமைதியையும் முழுமையையும் உணர்வது, மற்றவர்களுடனான நட்புறவை மேம்படுத்துவது, மனதில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலையை உருவாக்கி முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவது போன்றவை இந்த பயிற்சி வகுப்பின் பிரதான நோக்கங்கள் ஆகும். மேலும், அவர்கள் இவ்வகுப்பில் கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நீண்ட நாட்களாக அவர்கள் சந்தித்து வரும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும்.