இந்தியா

சாதியை காரணம் காட்டி பிரியாணி விற்றவர் மீது தாக்குதல்...! - வீடியோ

webteam

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் பட்டியல் இனத்தை சேர்ந்த 43 வயது நபர் பிரியாணி விற்றதற்காக அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். 

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா அருகே ரபுபுரா என்ற இடத்தில் லோகேஷ்(43) என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் பிரியாணி விற்று வந்துள்ளார். சில மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். லோகேஷை கன்னத்தில் தொடர்ந்து அறைந்து அருகில் உள்ள சுவரில் தள்ளிவிடுகின்றனர். மேலும் அவரை சாதி பெயரை கூறி தகாத வார்த்தைகளில் சாடுகின்றனர். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால் இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்தும் மீண்டும் லோகேஷ் பிரியாணி விற்றதால் கோபமடைந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நொய்டா கிரேட்டரின் மூத்த போலீஸ் அதிகாரி ரன்விஜய்சிங் கூறுகையில், “நேற்றுதான் அந்த வீடியோவை பார்த்தோம். பாதிக்கப்பட்டவரை கண்டறிந்து காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினோம். தாக்குதல் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை தேடி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.