இந்தியா

’பிரசாதம்’ சாப்பிட்ட 40 மாணவர்கள் திடீர் மயக்கம்: ஜார்கண்டில் பரபரப்பு!

’பிரசாதம்’ சாப்பிட்ட 40 மாணவர்கள் திடீர் மயக்கம்: ஜார்கண்டில் பரபரப்பு!

webteam

பிரசாதம் சாப்பிட்ட 40 மாணவர்களுக்குத் திடீரென்று உடல் நலக்குறை ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் சிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

வட இந்தியாவில், வசந்த பஞ்சமி என்ற சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோகர்தாகா என்ற மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றிலும் நேற்று கொண்டாடினர். பூஜை முடிந்து மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. அதை சாப்பிட்ட சுமார் 40 மாணவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அங்குள்ள சாதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

இதுபற்றி அந்த மருத்துவமனை டாக்டர் எஸ்.எஸ்.காலித் கூறும்போது, ’’இதுவரை 40 மாணவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பிரசாதமாகக் கொடுக்கப்பட்ட பூந்தியை தின்றுள்ளனர். அதைச் சாப்பிட்டதுமே வாந்தி எடுத்துள்ளனர். விஷம் கலந்த பூந்தி எனத் தெரிகிறது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்றார். 

மாவட்ட கல்வி அதிகாரி ரத்தன் மஹ்வார் கூறும்போது, ‘’இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு கொடுக்கப்பட்ட பிரசாத மாதிரியையும் ஆய்வுக்கு எடுத்திருக்கிறோம்’’ என்றார்.