இந்தியா

இந்திய நீதித்துறை வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற வழக்குகள் 

webteam

உச்சநீதிமன்ற வரலாற்றில், ‌தொடர்ந்து அதிக நாட்கள் நடைபெற்ற 2ஆவது வழக்காக அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விளங்குகின்றது. மிக நீண்டகாலமாக விசாரணை நடைபெற்ற சில வழக்குகளின் இதுவும் ஒன்றாக உள்ளது. 

கேரளாவின் எதனீர் மடத்தின் சொத்துகளை முடக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட நிலச் சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக பீடாதிபதி கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தை நாடினார். அவர் வழக்கை விசாரிக்க அப்போதைய தலைமை நீதிபதி சிக்ரி 13 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை நிறுவினார். இந்த அமர்வு 68 நாட்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. 1973ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கே இந்திய வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற வழக்காகும்.

அதன் பிறகு, 2018ஆம் ஆண்டு ஆதார் வழக்கு அதிக நாட்களுக்கு நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான வழக்கு, தீபக் மிஸ்ரா தலைமையி‌லான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 38 நாட்கள் விசாரிக்கப்பட்டது.

தற்போது, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வு 40 நாட்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியுள்ள அயோத்தி வழக்கு, இந்திய நீதித்துறை வரலாற்றில் அதிக நாட்கள் நடைபெற்ற 2ஆவது பெரிய வழக்காக ஆகியுள்ளது.