இந்தியா

வன்முறையில் முடிந்த சமூக வலைத்தள பதிவு: 40 பேர் கைது - நடந்தது என்ன?

JustinDurai

'இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது' எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் கர்நாடகா உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா.

கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைதான அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் பழைய ஹூப்ளி காவல் நிலையம் முன்பு நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் நிலையம் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உட்பட 12 காவலர்கள் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் லேசான தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி கும்பலை அங்கிருந்து கலையச் செய்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதகாவும் ஹூப்ளி-தர்வாட் போலீஸ் கமிஷனர் லாபு ராம் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, காயமடைந்த ஒரு போலீஸ் அதிகாரியின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அனுமன் யாத்திரையில் கலவரம் - டெல்லியில் 14 பேர் கைது