இந்தியா

பிஞ்சு மனதில் படர்ந்த வஞ்சம்! 7 மாதங்கள் காத்திருந்து பழிவாங்கிய டெல்லி சிறுவன்!

Sinekadhara

தந்தையை அடித்த நபரை 7 மாதங்கள் குறிவைத்து பார்த்திருந்த சிறுவன், தனது நண்பர்களை சேர்த்துக்கொண்டு துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் H - 4 ப்ளாக் பகுதியில் அமர்ந்திருந்த போது துப்பாக்கியால் சுட்டதில் முகத்தில் பலத்த காயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லியிலுள்ள ஜஹன்கிர்புரி பகுதியில் ஜூலை 15ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்ட சிறுவன் மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு சிறுவனின் தந்தையை அந்த நபர் 7 மாதங்களுக்கு முன்பு அடித்ததாகவும், அதனால் பழிவாங்கும் நோக்கில் சுட்டதாகவும் விளக்கமளித்துள்ளனர்.

சிறுவன் துப்பாக்கியால் சுட்ட வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த நபரை சுட்டவுடன் சிறுவர்கள் அங்கிருந்து தெறித்து ஓடும் காட்சிகள் அதில் பதிவாகியிருக்கிறது. மாலை 5.15 மணியளவில் இந்த சம்பவம் குறித்து ஜஹன்கிர்புரி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன்பேரில் போலீசார் விசாரணை செய்தனர். அதில் தாக்குதலுக்கு ஆளான நபரின் பெயர் ஜாவெத் என தெரியவந்துள்ளது. அந்த நபர் தற்போது BJRM மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.