இந்தியா

நாக்பூர்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 4 நோயாளிகள் உயிரிழப்பு

JustinDurai

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 8.10 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீவிர சிகிச்சைப்பிரிவு அமைந்துள்ள மருத்துவமனையின் 2-வது மாடியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக நோயாளிகள் அலறி துடித்தனர். மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

மேலும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஒரு புறம் தீயணைப்பு பணியிலும், மற்றொரு புறம் மீட்பு பணியிலும் ஈடுபட்டனர். ஆனாலும் 4 நோயாளிகள் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். இன்னும் சிலரை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

ஏ.சி.யில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டபோது இரண்டாவது மாடியில் 10 நோயாளிகள் இருந்தனர். ஆறு நோயாளிகள் தப்பிவிட்டனர். இது கொரோனா வார்டு அல்லாத மருத்துவமனை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.