இந்தியா

வன்கொடுமை செய்து கழுத்தறுத்து, முகத்தை சிதைத்து 8 வயது சிறுமி கொலை - டெல்லியில் கொடூரம்

Sinekadhara

டெல்லியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கழுத்தை அறுத்து, முகத்தை சிதைத்து யமுனையில் வீசிய கசாப்பு கடைக்காரரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

கூலிவேலை செய்யும் தம்பதியரின் 8 வயது மகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டதாக சிறுமியின் தாயார் ஆகஸ்ட் 5ஆம் தேதி போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் கடத்த வழக்கை பதிவுசெய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமியின் உடல் யமுனை ஆற்றங்கரையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார். அவர் பேசியபோது, ‘’காணாமல்போன சிறுமியின் புகைப்படத்தை எங்களுடைய மண்டல காவல் நிலையங்கள் மற்றும் அண்டை காவல்நிலையங்களுக்கு அனுப்பினோம். ஆகஸ்ட் 18ஆம் தேதி யமுனை கதார் பகுதியில் வயலில் புல் அறுத்துக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் சிறுமியின் உடல் ஒன்று அங்கி கிடப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர்.

அதன்பிறகு கைரேகைகளை ஆய்வுசெய்ய தடவியல் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதில் சிறுமியின் தொண்டையில் கத்தியால் குத்திய காயங்கள் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் உடல் கொண்டுசெல்லப்பட்டது. சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பாக அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் உருத்தெரியாமல் இருக்க முகத்தை கூரிய ஆயுதங்களால் தாக்கி சிதைத்திருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்’’ என தெரிவித்தார்.

இதனையடுத்து சிறுமி காணாமல் போன வழக்கு கொலை மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் பாலியல் வன்கொடுமைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து குழந்தையின் குடும்பத்தாரை போலீசார் விசாரிக்கத்தொடங்கினர். சிறுமிக்கு உடன்பிறந்தோர் 3 பேர். அவர்களும் அந்த நேரத்தில் வீட்டில் தூங்கியிருக்கின்றனர்.

சிறுமியின் கழுத்து அறுபட்டிருக்கும் விதம் யாரோ கைதேர்ந்தவர் செய்தது போல் இருப்பதாக தடவியல் நிபுணர்கள் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் உள்ளூர்வாசிகளை விசாரித்ததில் அதேபகுதியைச் சேர்ந்த 36 வயதான உள்ளூர் ரவுடியான கசாப்பு கடைக்காரர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

அந்த நபரை விசாரித்ததில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடமிருந்து முக்கிய ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சிறுமியின் உடலை ஆற்றங்கரையில் வீசியதையும் அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.