இந்தியா

அக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதாக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை!

ச. முத்துகிருஷ்ணன்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய “அக்னிபாத் திட்டம்” நாடு முழுவதும் புயலைக் கிளப்பியுள்ளது. ஓய்வூதியம் உட்பட பாதுகாப்பு துறையில் ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டும் இளைஞர்களை பணிக்கு அமர்த்தும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குரூப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பொய்யான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும் ராணுவத்தில் சேர ஒழுக்கம் அவசியம் என்றும் லெப்டினண்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.