இந்தியா

தீவிரம் காட்டும் கொரோனா: இன்று மட்டும் 34 பேர் உயிரிழப்பு

webteam

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவல், தீவிர நிலையில் இருந்து  குறைந்து ஓய்ந்துவிட்ட நிலையில் இந்தியாவிலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற சமூக பரவலை தடுக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி இயல்பான சமூக நிலையே நிலவிவருகிறது.

மேலும் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின் படியும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படியும் நாடு முழுவதும் பெரும்பாலானோருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு, பாதிக்கும் மேற்பட்டோருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாய் இதுவரை இந்தியா முழுவதிலும் 204.60 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தமாக இதுவரை 4,33,83,787 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 13,734 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1,39,792 பேர் கொரோனா நோய்தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 17,897 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவந்துள்ள நிலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் மொத்தமாய் 34 பேர் கொரோனா நோய்தொற்குக்கு உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா நோய்தொற்று பரவல் குறைந்திருப்பதாய் தெரிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை விவரங்கள் நம்மை இன்னும் நாம் பாதுகாப்பாய் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

நாட்டில் கொரோனா பரவல் தினசரி சதவீதம் 3.34 ஆகவும், வாராந்திர சதவீதம் 4.79 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.20 ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.49 ஆகவும் இருந்து வருகிறது.