இந்தியா

அத்துமீறியவர்களை தாக்கிய மாணவிகள்..! பழிவாங்கிய இளைஞர்கள்

அத்துமீறியவர்களை தாக்கிய மாணவிகள்..! பழிவாங்கிய இளைஞர்கள்

Rasus

தங்களிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்களை பள்ளி மாணவிகள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனால் அந்த இளைஞர்கள் ஒரு கும்பலை திரட்டிக் கொண்டு பள்ளி மாணவிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 34 மாணவிகள் காயமடைந்தனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது சவுபால் மாவட்டம். இங்குள்ள கஸ்தூர்பா குடியிருப்பு பள்ளிக்குள் கள்ளத்தனமாக சில உள்ளூர் இளைஞர்கள் நுழைந்துள்ளனர். அதனைக் கண்ட பள்ளி மாணவிகள் அவர்களை வெளியே போகுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் வெளியே போக மறுப்பு தெரிவித்ததோடு மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றிருக்கின்றனர். இதனையடுத்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவிகள் அந்த இளைஞர்களை ஒன்றுசேர்ந்து தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களோடு மீண்டும் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது உள்ளூர் கும்பலும் வந்திருக்கிறது. பள்ளியின் பாதுகாப்பிற்காக எந்த காவலர்களும் இல்லாத நிலையில் அந்த கும்பல் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை தாக்கியுள்ளது. இதில் 34 மாணவிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தற்போது 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தாக்குதல் சம்பவத்திற்கு ஆளாகியுள்ள மாணவிகள் அனைவரும் 12-லிருந்து 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 6 நபர்கள் மாயமாகி உள்ள நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மாணவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

Courtesy: NDTV