கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சார்ந்த அப்துல் ரஹீம் கடந்த, 2006-ம் ஆண்டு தனது 26வது வயதில் ஓட்டுநர் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார். அந்நாட்டின் தலைநகரான ரியாத்தில், அப்புதுல்லா என்பவரின் கார் ஓட்டுநராக அவர் பணிபுரிந்து வந்த நிலையில், அப்புதுல்லாவின் மகன் அனாசி அல்ஷாஹ்ரி என்ற சிறுவனை பாராமரிக்கும் பொறுப்பும் அவருக்கு கொடுக்கப்பட்டது.
அனாசிக்கு கழுத்துக்கு கீழ் உள்ள பகுதிகள் செயல்படாமல் இருந்த நிலையில், அவருக்கு கழுத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிறப்புக் கருவியின் மூலமே, உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்தசூழலில் தான், 2006 டிசம்பர் 24 ம் தேதி அச்சிறுவனை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் மார்க்கெட்டுக்கு அப்துல் ரஹீம் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாரத விதமாக அவரது கை சிறுவனின் கழுத்தில் பொறுத்தப்பட்டுள்ள கருவியின் மீது பட்டதில் அச்சிறுவன் உயிரிழந்திருக்கிறான்.
இதுதொடர்பான வழக்கில், அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்ட நிலையில், 2011 ஆம் ஆண்டு அவருக்கு சவூதி உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து, அவர் சவுதி அரேபியாவின் அல் ஹைர் சிறையில் அடைக்கப்பட்டார். இது கொலை அல்ல; விபத்து தான் என அப்துல் ரஹீம் தரப்பில் சட்டப்போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் 15 மில்லியன் ரியாத், அதாவது இந்திய மதிப்பில் 34 கோடி ரூபாய் ’குருதிப் பணம்’ (Blood Money) கொடுக்கும் பட்சத்தில் அப்துல் ரஹ்மானுக்கு மன்னிப்பு அளிக்க முன்வந்தனர். தொடர்ந்து, இந்த பணம் செலுத்த 2024 ஏப்ரல் 18 காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தால், இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியாது என்பதால், கேரள மக்கள் ஒன்றிணைந்து கிரவுட் வண்டிங் 'Crowdfunding' மூலம் உலகெங்கிலும் உள்ள மலையாளிகளிடம் நிதி திரட்டினர். இதனால், மிகக் குறுகிய காலத்தில் ₹34 கோடி நிதி திரட்டப்பட்டு, சவுதி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தது. எனினும், பணியில் அலட்சியமாக இருந்து ஒரு சிறுவனின் மரணத்திற்கு காரணமாக இருந்ததால், அவர் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை நிறைவு செய்ய வேண்டுன் என நீதிமன்றம் தெரிவித்துவிட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அப்துல் ரஹீம் தற்போது விடுதலையாகியுள்ளார்.
தொடர்ந்து, பக்ரீத் நாளான நேற்று அவர் கேரளா திரும்பிய நிலையில், கோழிக்கோடு விமான நிலையத்தில், திரண்டிருந்த அவரது உறவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, வீட்டிற்கு சென்ற அவர், னது தாயைக் கட்டிப்பிடித்து அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனைக் கண்ட தாய், ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இதுகுறித்துப் பேசியுள்ள அப்துல் ரஹீம் "எனது தாயை மீண்டும் பார்க்க வாய்ப்பளித்த அந்த இறைவனுக்கும், எனக்கு உதவிய ஒவ்வொரு கேரள மக்களுக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கேரள மக்களின் ஒற்றுமைக் காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.