encounter in Varanasi  ANI
இந்தியா

₹30 லட்சம் பின்னணி.. வாரணாசியில் என்கவுன்டர்! நடந்தது என்ன?

மாவோயிஸ்ட் தளபதி பிரிஜேஷ் கஞ்சு, வாரணாசியில் காவல்துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் தளபதி ஒருவர் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைப் பிடிக்க தகவல் அளிப்பவர்களுக்கு மொத்தம் ₹30 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

கொல்லப்பட்டவர் பிரிஜேஷ் கஞ்சு என்ற கோபால் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜார்க்கண்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான திரிதியா பிரஸ்துதி கமிட்டி (TPC) அமைப்பின் தலைவராக அவர் செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு, CPI (Maoist) அமைப்பிலிருந்து பிரிந்து குழுவாக உருவானதாகக் கூறப்படுகிறது.

Brijesh Ganjhu

ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள லுதுவைச் சேர்ந்த பிரிஜேஷ் கஞ்சுவை கைது செய்ய உதவும் தகவலுக்கு மாநில அரசு ₹25 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது. மேலும், தேசிய புலனாய்வு முகமை (NIA) சார்பில் ₹5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருக்கு எதிரான மொத்த சன்மானத் தொகை ₹30 லட்சமாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை வாரணாசியின் தெங்கரா மோட் பகுதியில் இந்த என்கவுன்டர் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரிஜேஷ் கஞ்சு தனது கூட்டாளி ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் தேக்ரா மோட்டிலிருந்து ராம்நகர் வழியாக முகல்சராய் நோக்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அவர்களை வழிமறித்து கைது செய்ய முயன்றனர். ஆனால், போலீசாரை கண்டதும் பிரிஜேஷ் கஞ்சு வாகனத்திலிருந்து குதித்து துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த மோதலில் பிரிஜேஷ் கஞ்சு மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில், துணை காவல் கண்காணிப்பாளர் விபின் ராய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.