மே 2023-இல் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கு இடையே இனக்கலவரங்கள் வெடித்தன; இதில் குறைந்தது 260 பேர் உயிரிழந்ததுடன், 59,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் இன்றுவரை அங்கு வன்முறைச் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில், குக்கி மற்றும் நாகா சமூகங்களுக்கு இடையே வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் இருவர் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; மூன்றாவது நபர் 'தாங்க்குல் நாகா' சமூகத்தைச் சேர்ந்தவர். உக்ருல் மாவட்டத்தில் தாங்க்குல் சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக இருக்கின்றனர்.
'வெள்ளிக்கிழமை ஏப்ரல் 24 அன்று குக்கி சமூக கிராமங்களான முல்லம் மற்றும் ஷோங்பால் ஆகிய இடங்களில் மக்கள் தங்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஆயுதம் ஏந்திய தாங்க்குல் நாகா இனத்தவர்கள் அக்கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 'குக்கி மனித உரிமைகள் அமைப்பு' குற்றம் சாட்டியுள்ளது.
இத்தாக்குதலில், இரண்டு கிராமத் தன்னார்வலர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்படப் பலரை காயப்படுத்தியதோடு, பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தீ வைத்ததாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கொல்லப்பட்ட தன்னார்வலர்களான எல்.சிட்ல்ஹௌ மற்றும் பி.ஹாவோலாய் ஆகிய இருவரும், துப்பாக்கிக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 2023 மே மாதம் மணிப்பூரில் இன மோதல்கள் வெடித்ததிலிருந்து, கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில் ஆயுதம் ஏந்திய பொதுமக்கள் கிராமத் தன்னார்வலர்களாகச் செயல்பட்டு வருகிறார்கள்.