இந்தியா

உ.பி: கடையில் திண்பண்டங்கள் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் உயிரிழப்பு

Veeramani

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சிற்றுண்டி சாப்பிட்ட  ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.

ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மிர்சா இனாயத்துல்லாபூர் பட்டி கிராமத்தில் சனிக்கிழமையன்று நவீன் குமார் சிங்கின் மூன்று மகள்களான 8 வயதான பரி, 7 வயதான விதி மற்றும் 5 வயதான பிஹு ஆகியோர் ஒரு கடையில் அரிசி மற்றும் நம்கீன் எனப்படும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டனர்.

இந்த திண்பண்டங்களை சாப்பிட்ட பிறகு அந்த மூன்று சிறுமிகளும் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர், உடனடியாக குடும்பத்தினர் அவர்களை சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர், அங்கு ஒரு சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், மற்ற இரண்டு சிறுமிகள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையின் போது அந்த இரண்டு சிறுமிகளும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும், துணை பிரிவு மாஜிஸ்திரேட் அந்த கிராமத்தை அடைந்து சிறுமிகள் உட்கொண்ட தின்பண்டங்களின் மாதிரிகளை எடுத்துக்கொண்டார். சிறுமிகள் சிற்றுண்டிகளை வாங்கிய கடைக்காரர் மற்றும் அவரது இரண்டு மகன்களை போலீசார் கைது செய்தனர்.