இந்தியா

‘த்ரிஷியம்’ பட பாணியில் இளைஞர் கொலை: மூவரை கைது செய்த போலீசார்!

webteam

த்ரிஷியம் பட பாணியில் நண்பனை கொலை செய்து புதைத்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் சக நண்பனை அடித்துக்கொன்ற மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 32 வயதான திலீப் என்பவர் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் சாலையோர உணவுக்கடை நடத்தி வந்த தாக்கூருக்கும், திலீப்பின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தெரிந்துகொண்ட திலீப் தன்னுடைய வீட்டை வேறு பகுதிக்கு மாற்றியுள்ளார். மேலும் தாக்கூரை நேரில் சந்தித்த அவர், தன்னுடைய மனைவியிடம் இருந்து விலகி இருக்குமாறு கூறியுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது பக்கத்தில் இருந்த சுத்தியலால் திலீப்பை தாக்கூர் தாக்க நிலைகுலைந்த திலீப் அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். உடனடியாக இருவரை துணைக்கு அழைத்த தாக்கூர், உணவகத்தின் பின்புறத்தில் பெரிய குழி தோண்டி திலீப்பின் உடலை புதைத்துள்ளார். மேலும் திலீப் வந்த இருசக்கர வாகனத்தையும் அவர் அதே குழிக்குள் புதைத்து, உப்புடன் சேர்த்து மண்ணால் குழியை மூடியுள்ளார். பின்னர் ஏதும் நடக்காததுபோல தாக்கூர் வழக்கமாக தன் பணிகளை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே திலீப்பை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் தாக்கூரின் மீது சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரது உணவகத்திற்கு அடிக்கடி மாறு வேடத்தில் சென்று நிலைமையை கண்காணித்துள்ளனர். சரியான ஆதாரம் கிடைத்ததும், தாக்கூரை சுற்றிவளைத்த காவலர்கள் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திலீப்பை கொலை செய்து புதைத்து வைத்ததை தாக்கூர் ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின்பேரின் திலீப்பின் உடல் மற்றும் அவரது வாகனத்தை போலீசார் மீட்டனர்.

மேலும் இந்தியில் வெளியான ‘த்ரிஷியம்’ படத்தில் வருவதுபோல திலீப்பின் செல்போனை லாரியில் வீசி விட்டதாகவும், அதைப்போலவே உடலை புதைத்துவிட்டு தப்பிவிடலாம் என நினைத்ததாகவும் கொலையாளி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.