இந்தியா

காஷ்மீரில் இரட்டை என்கவுன்ட்டர் - 3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜா. ஜாக்சன் சிங்

காஷ்மீரில் நடந்த இரட்டை என்கவுன்ட்டர் சம்பவங்களில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கண்டி பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார், சிஆர்பிஎஃப் வீரர்கள், ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு கண்டி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினர் தங்களை நெருங்குவதை உணர்ந்த தீவிரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆவார். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாகிஸ்தான் தீவிரவாதி எதற்காக காஷ்மீருக்கு வந்தார்; பெரிய தாக்குதலுக்கு இவர்கள் திட்டம் தீட்டினார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல, பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள பானிபோரா வனப்பகுதியில் நேற்று இரவு நடந்த என்கவுன்ட்டர் சம்வபத்தில் ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி கொல்லப்பட்டார்.