இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் - 3 சிஆர்பிஎப் வீரர்கள் மரணம்

jagadeesh

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்ததாக என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நாடு முழுவதும் தீவிரம் காட்டப்படும் நிலையில் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் சிலர் அவர்கள் மீது குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

தகவலறிந்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வருவதாக சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.