2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு தேதியை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 2007ல் 2ஜி அலைவரிசை ஏல நடைமுறையை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தொடங்கியது. ஏல நடைமுறை சரியானதாக இல்லை எனக் கூறி 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு நிதியமைச்சகம் கடிதம் எழுதியது. 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ஒட்டுமொத்த ஏல நடைமுறையும் நியாயமற்றதாகவும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2ஜி ஏலத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக, 2010ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளால் மத்திய அமைச்சர் ராசா தன் பதவியை நவம்பர் 14ஆம் தேதி ராஜினாமா செய்தார். பின்னர் 2011 பிப்ரவரி 17ஆம் தேதி ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி ராசா உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தனது முதல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கலான 2வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் இடம் பெற்றன. இந்த விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கில் தீர்ப்பின் தேதி இன்று அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20ஆம் தேதி விசாரணையின் போது, வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, தேதி அறிவிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தார். ஆகையால் இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டால், வரும் 28ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளன. இந்த 2 புலனாய்வு அமைப்புகள் பதிவு செய்த வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.