இந்தியா

பேருந்து கவிழ்ந்து 29 பேர் உயிரிழப்பு: அதிகாலையில் பரிதாபம்

webteam

உத்தரபிரதேசத்தில், பேருந்து கவிழ்ந்து விழுந்ததில், 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உ.பி அரசுக்கு சொந்தமான இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், இன்று காலை 5 மணிக்கு வந்துகொண்டிருந்தபோது, நிலைதடுமாறி பாலத்தில் இருந்த தடுப்பு மீது மோதியது.

பின்னர் கீழே இருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மீட்பு பணிகளை தொடங்கினர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச சாலை போக்குவரத்துக் கழகம் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

முதலமைச்சர் ஆதித்யாநாத், தனது வருத்தத்தையும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.