இந்தியா

5 ஆண்டுகளில் 25 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுகிறது: தமிழகத்தில் எங்கெல்லாம்?

Veeramani

வரும் 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 25 விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் தெரிவித்திருக்கிறார்.

சொத்தினை பணமாக்குதலுக்கான மத்திய அரசின் திட்டங்களின் ஒரு பகுதியாக, நாக்பூர், வாரணாசி, டேராடூன், திருச்சி, இந்தூர், சென்னை, கோழிக்கோடு, கோயம்புத்தூர், புவனேஷ்வர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் உள்ள மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறினார்.

மேலும் மதுரை, திருப்பதி, ராஞ்சி, ஜோத்பூர், ராய்ப்பூர், ராஜமுந்திரி, வதோதரா, அமிர்தசரஸ், சூரத், ஹூப்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், போபால் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களையும் தனியார்மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வருடாந்திர போக்குவரத்தின் அடிப்படையில் இந்த விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருடாந்திரம் 0.4 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்யும் அனைத்து விமான நிலையங்களும் தனியார் மயமாக்கலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  வி.கே.சிங் கூறினார்.

2020-21 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாட்டில் உள்ள 136 விமான நிலையங்களில் 133 நிலையங்கள் பெரிய இழப்பை சந்தித்ததாகவும், இந்தியாவில் உள்ள 136 விமான நிலையங்களுக்கான வருவாய்த் தரவுகளின்படி  2020-21ல் மொத்தமாக ரூ.2,882.74 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், கன்டாலா, கான்பூர் சாகேரி, பரேலி மற்றும் போர்பந்தர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள விமான நிலையங்கள் மட்டுமே லாபத்தில் இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.