இந்தியா

" 22 கிலோவுக்கு வெள்ளி செங்கல்"ராமர் கோயில் பூமி பூஜை தீவிரம்

jagadeesh

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் பூமி பூஜைக்காக 22 கிலோ எடைக் கொண்ட வெள்ளி செங்கல் கொண்டுவரப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பல்லாண்டு கால சட்டப் போராட்டங்களுக்கு பின்னர், உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு, கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பில் மற்றொரு முக்கிய அம்சமாக, அயோத்தியில் முக்கிய இடத்தில் மசூதி கட்டிக்கொள்ளவும் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளை கோவில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அய்யோத்தியில் 161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் பிரமாண்டமாக அமையப்போகிற ராமர் கோயிலுக்கு பூமி பூஜை, வருகிற 5 ஆம் தேதி கோலாகலமாக நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்க உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ராமர் கோயில் பூமி பூஜைக்காக 22 கிலோ எடைக் கொண்ட வெள்ளி செங்கல் பயன்படுத்தப்பட இருப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சுரேஷ் நகுவா தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ளார். அந்த வெள்ளி செங்கல்லில் பூமி பூஜை ஆகஸ்ட் 5 ஆம் தேதி பகல் 12 மணி 15 நிமிடம் 15 வினாடியில் நடைபெறும் என எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.