2005-ஆம் ஆண்டு டெல்லியை உலுக்கிய குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஜூஸ் கடை உரிமையாளரின் குழந்தைகள், 19 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நகரில் நடந்த புதிய குண்டுவெடிப்பிலிருந்து மயிரிழையில் உயிர்தப்பினர். தந்தையின் உயிரைப் பறித்த பயங்கரவாதத்தின் நிழல் மீண்டும் அவர்களைத் துரத்தியது போல அமைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்
2005 அக்டோபர் 29 அன்று தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச், கோவிந்த்புரியில் உள்ள டிடிசி பேருந்து மற்றும் சரோஜினி நகரில் நடந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களில் 62 பேர் கொல்லப்பட்டனர். டெல்லியை உலுக்கிய இந்த தொடர் குண்டுவெடிப்பில், சரோஜினி நகரில் ஜூஸ் கார்னர் நடத்தி வந்த லால் சந்த் என்பவரும் கொல்லப்பட்டார். அந்தச் சமயத்தில், ஜூஸ் கார்னரில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், கடையின் அருகே ஒரு கவனிக்கப்படாத பை இருப்பதைக் கண்டு, உரிமையாளர் லால் சந்த்துக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் அதைத் திறந்தபோது, கம்பியால் மூடப்பட்ட பிரஷர் குக்கர் வெடிகுண்டைக் கண்டுபிடித்தனர். அது வெடித்துச் சிதறுவதற்கு முன்பு அதை நகர்த்த முயன்றனர். இதனால் அவர்களும் மற்றவர்களும் கொல்லப்பட்டனர். அவருடைய படுகொலைக்குப் பிறகு, அந்தக் கடையை லால் சந்தின் மனைவி கிரண் சலுஜா எடுத்து நடத்தி வந்தார். அவரும், கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
பின்னர், அவருக்குப் பிறகு அந்தக் கடையை அவர்களது மகன் 23 வயதான நிர்மித் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், நிர்மித் மற்றும் அவரது சகோதரி கருணா சலுஜா ஆகிய இருவரும் கடந்த நவம்பர் 10ஆம் தேதி செங்கோட்டை பகுதியைக் கடந்து சென்றபோது, கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
நவம்பர் 10ஆம் தேதி மாலை 6.52 மணியளவில் செங்கோட்டை சிக்னல் அருகே ஹரியானா நம்பர் பிளேட்டைக் கொண்ட காரிலிருந்து குண்டு வெடித்தது. இதில் தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமுற்று மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பில், சுற்றியிருந்த 10 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில்தான் 2005 குண்டுவெடிப்பில் உயிரிழந்தவரின் குழந்தைகள் செங்கோட்டை குண்டுவெடிப்பிலிருந்து தப்பிய கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. கிழக்கு டெல்லியின் கீதா காலனியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்திற்குச் சென்று, உயிரிழந்த தந்தையின் காப்பீட்டுக் கொள்கையில் நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்த்துவிட்டு, சகோதரர்கள் துவாரகாவிற்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் லால் கிலா சாலையைக் கடந்தபோதுதான் அந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்துள்ள கருணா சலுஜா, ”எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. குண்டுவெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு நானும் என் சகோதரர் நிர்மித்தும் லால் கிலாவில் சாலையைக் கடந்தோம். எங்கள் தந்தையின் எல்ஐசி பாலிசி தொடர்பான விஷயங்களுக்காக கீதா காலனியில் இருந்து திரும்பிச் செல்லும் காரில் நாங்கள் இருந்தோம். எங்கள் உறவினர் போன் செய்து செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறியபோது, அது எவ்வளவு அருகில் இருந்தது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அவர் எங்கள் பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டார். பயங்கரவாதத் தாக்குதலில் தனது தந்தையை இழந்த ஒருவராக, ஓர் அன்புக்குரியவரை இழப்பதன் வலியை நான் அறிவேன். நாட்டில் நடக்கும் ஒவ்வொரு குண்டுவெடிப்பும் என்னை நடுங்க வைக்கிறது. என் தந்தையின் நினைவுகள் மீண்டும் பொங்கி வழிகின்றன” என அதில் தெரிவித்துள்ளார்.
டெல்லி நகரம் இன்னுமொரு முறை பயங்கரவாத தாக்குதலால் நடுங்கிய நிலையில், 19 ஆண்டுகளுக்கு முன் அதே நகரில் தந்தையை இழந்த குழந்தைகள் மீண்டும் அதே பயத்தை நேரில் அனுபவித்துள்ளனர். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் இந்த நிகழ்வு, பயங்கரவாதம் ஒரு குடும்பத்தின் வாழ்வை எவ்வளவு ஆழமாக காயப்படுத்த முடியும் என்பதற்கான துயரமான சாட்சி ஆகும்.
ஒரு நகரம், இரண்டு வெடிப்புகள்... இரண்டு தலைமுறைகள் ஒரே வலியை மீண்டும் அனுபவித்தது. ஆனால் இந்த முறை மரணம் அவர்களைத் தேடியபோதும், நல்வாய்ப்பானது கருணையுடன் அவர்களை காப்பாற்றியது.