இந்தியா

முதல் பிரசவமான 26 நாட்களில் இரட்டை பிரசவம் நடந்த அதிசயம்

webteam

வங்காளதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவம் ஆன 26 நாட்களில் மேலும் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வங்காளதேசம் ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிஃபா சுல்தானா. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். சுமார் 9 மாத கர்ப்பமாக இருக்கும் போதே அதவாது கடந்த பிப்ரவரி 25ம் தேதி இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சில மணி நேரங்களில் சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல வளர்ச்சியுடன் இருந்ததால் மருத்துவர்கள் அவர்களுக்கு வழக்கம் போல சிகிச்சையளித்து தாயையும் குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஆரிஃபாவிற்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் குழம்பமடைந்த ஆரிஃபா மீண்டும் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் வயிற்றில் மேலும் இரட்டை குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. 

அந்தக் குழந்தைகளை டாக்டர்கள் சிசேரியன் மூலம் வெளியே எடுத்தனர். கடந்த மாதம்தான் அந்தப் பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில் மீண்டும் எப்படி அதுவும் இரட்டை குழந்தை பிறந்தது என மருத்துவர்கள் அவரை சோதனை செய்தனர். அப்போது அவருக்கு இரட்டை கருப்பைகள் இருப்பது தெரியவந்தது. 

தற்போது தாயும் 3 குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவத்துறையில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை தாங்கள் முதன்முதலாக பார்க்கிறோம். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டதே இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.