Viral Video
Viral Video Twitter
இந்தியா

கேதார்நாத்: குதிரையை வலுக்கட்டாயமாக புகைப்பிடிக்கச் செய்யும் பராமரிப்பாளர்கள் - வைரலாகும் வீடியோ

Justindurai S

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் சார்தாம் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களையும் அவர்களது உடைமைகளையும் ஏற்றிச் செல்வதற்காக குதிரைகள், கோவேறு கழுதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குதிரைகளுக்கு ஓய்வே கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவதாகவும், பராமரிப்பாளர்களால் தாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தவாறு உள்ளன.

இந்நிலையில் இரு பராமரிப்பாளர்கள் சேர்ந்து ஒரு குதிரையை வலுக்கட்டாயமாக புகைப்பிடிக்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் குதிரையின் மூக்கை பொத்துகிறார். மற்றொரு நபர் பற்ற வைத்த சிகரெட்டை குதிரையின் வாயில் வலுக்கட்டாயமாக வைத்து புகைக்கச் செய்கிறார். சில நொடிகளில் குதிரையின் வாயில் இருந்து புகை வெளியேறுகிறது. இந்த வீடியோவைக் கண்டு கொதிப்படைந்த நெட்டிசன்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற செயல்களால் குதிரைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், அதில் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது என விலங்குகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கேதார்நாத் போலீஸார் தேடி வருகின்றனர்.