’காதல் என்று எழுதச் சொன்னால் போதும்; எழுதத் தெரியாதவன்கூட இவ்வுலகில் எழுத்தாளனாகிவிடுகிறான்’ என்பான் ஒரு கவிஞன். காரணம், காதல் அவ்வளவு வலிமையானது. ஆனால், எதிர்ப்பவர்களோ வீரியமில்லாதவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் உண்மைக் காதலில் உயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுதுமே அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படியான ஒரு சம்பவம்தான் நேற்று உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள ஃபுலாட் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிமோகன். இவருடைய மகளை அங்கித் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் ஹரிமோகனுக்குத் தெரிய வந்துள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றபோது, மகளின் காதலுக்கு ஹரிமோகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து எதிர்ப்பு வலுக்கவே ஹரிமோகனையும் மீறி அங்கித் அவருடைய மகளை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த ஹரிமோகன், நேற்று அங்கித்திடம் சென்று சண்டை போட்டுள்ளார். அப்போது, இருதரப்பினரும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் அங்கித் மற்றும் ரோகித் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். ஹரிமோகன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவரும் போலீசார், ’இந்த சம்பவத்தில் ராஜூ, மோனு மற்றும் கோவர்தன் ஆகிய 3 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.