இந்தியா

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு: 19 பேர் உயிரிழப்பு; 5 பேர் மாயம்

Sinekadhara

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரமாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு, கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர் என அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை இயக்குநர் சுதேஷ் குமார் மோக்தா தெரிவித்துள்ளார்.

மாண்டி, காங்க்ரா மற்றும் சாம்பா மாவட்டங்களில் அதீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதுவரை 36 வானிலை தொடர்பான சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாண்டி மாவட்டம் வழியான மணாலி - சண்டிகர், ஷோகி மாவட்டம் வழியான சிம்லா - சண்டிகர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் 743 சாலைகள் வழியாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் மாண்டி மாவட்டத்தில் மட்டும் பெருவெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4-5 மணிநேர தீவிர தேடுதலுக்குப் பிறகு 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பல வீடுகள் இதில் இடிந்து நாசமாகியுள்ளன.