இந்தியா

கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரா போன ”Fire Haircut”.. இளைஞருக்கு நேர்ந்த அட்டக்கத்தி சம்பவம்!

Sinekadhara

குஜராத்தில் Fire Haircut பண்ணச் சென்ற இளைஞரின்மீது தீப்பற்றியதில் உடலின் மேற்பகுதி முழுதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் வால்சாத் மாவட்டத்திலுள்ள வாபி நகரில் முடிதிருத்தும் சலூனுக்கு 18 வயது இளைஞர் ஒருவர் புதன்கிழமை முடிவெட்ட சென்றுள்ளார். சமீப காலமாக ட்ரெண்டில் உள்ள Fire Haircut முறையில் தலைமுடியை செட் செய்ய முயன்றுள்ளார் சிகை அலங்கார நிபுணர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை மீறி நெருப்பு அதிகமாக வெளிவந்ததில் இளைஞரின் தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

உடனடியாக இளைஞரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மேல்சிகிச்சைக்காக அவர் வால்சாத் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல் அதிகாரி கரம்சிங் மக்வானா கூறுகையில், ‘’இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயமடைந்த 18 வயது இளைஞர் மற்றும் சிகை அலங்கார நிபுணர் ஆகிய இருவரிடமிருந்தும் வாக்குமூலம் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட இளைஞரிடமிருந்து வாக்குமூலம் பெற முயற்சித்து வருகிறோம். வால்சாத் மருத்துவமனையிலிருந்து அவரை சூரத் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுவிட்டது தெரியவந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், Fire Haircut செய்வதற்காக தலையில் கெமிக்கல் தடவியதால் தீ வேகமாக பரவியது தெரியவந்திருக்கிறது. எனவே என்ன கெமிக்கலை முடி திருத்துபவர் பயன்படுத்தினார் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்’’ என்று கூறினார்.