இந்தியா

ரயில்கள், ரயில் நிலையங்களில் 165 பாலியல் வன்கொடுமைகள்.. அதிர்ச்சி தகவல்..!

ரயில்கள், ரயில் நிலையங்களில் 165 பாலியல் வன்கொடுமைகள்.. அதிர்ச்சி தகவல்..!

webteam

இந்தியாவில் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் 165 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச்சை நகரத்தை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர். இவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019 வரை ரயில் நிலையங்களில் மற்றும் ஓடும் ரயில்களில் நடந்த பாலியல் சார்ந்த குற்றங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் நடந்த குற்றச்சம்பவங்கள் குறித்த விவரங்களை ரயில்வே துறை தாக்கல் செய்துள்ளது.

ரயில்வே துறை தாக்கல் செய்த விவரங்கள் பின்வருமாறு.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மொத்தம் 165 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் அதில் ரயில் நிலையங்களில் 136 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் ஓடும் ரயிலில் 29 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 44 பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ரயில் நிலையங்களில் 36 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் ஓடும் ரயிலில் 8 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளன.

2018-ஆம் ஆண்டு பொருத்தவரை மொத்தம் 70 பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ரயில் நிலையங்களில் 59 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் ஓடும் ரயிலில் 11 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளன. 2017-ஆம் ஆண்டை பொருத்தவரை மொத்தம் 51 பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் ரயில் நிலையங்களில் 41 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் ஓடும் ரயிலில் 10 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடந்துள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 1,672 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 802 சம்பவங்கள் ரயில் நிலையத்திலும் 870 சம்பவங்கள் ஓடும் ரயிலிலும் நடந்துள்ளன.

இது மட்டுமல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளில் 771 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் 4718 கொள்ளை சம்பவங்கள் மற்றும் 213 கொலைமுயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.