இந்தியா

டெல்லி: ஆண் நண்பருடன் சாட் செய்த தங்கையை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

Sinekadhara

டெல்லியில் ஆண் நண்பருடன் சாட் செய்த தங்கையை துப்பாக்கியால் சுட்ட 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் 17 வயது இளைஞரும் அவரது தங்கை(16 வயது)யும் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். அந்த சிறுமி பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வீட்டில் இருந்துள்ளார். திறந்தவெளிப் பள்ளியில் படித்துவரும் அந்த இளைஞர் ஒரு சலூன் கடையில் வேலை செய்துவந்துள்ளார்.

வீட்டிலிருந்த அந்த சிறுமி தனது ஆண் நண்பருடன் செல்போனில் பேசியபடியும், வாட்ஸ் அப்பில் சாட் செய்தபடியும் இருந்துள்ளார். தனது தங்கையின் நடவடிக்கைகள் பிடிக்காத இளைஞர் பலமுறை கண்டித்திருக்கிறார். ஆனால் அந்த சிறுமி அதை பொருட்படுத்தவில்லை. வியாழக்கிழமை மதியம் அந்த சிறுமி மீண்டும் தனது ஆண் நண்பருடன் சாட் செய்துகொண்டிருந்ததை கவனித்த அந்த இளைஞர் ஆத்திரமடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கோபத்தில், வெளியே சென்ற இளைஞர் துப்பாக்கி வாங்கிவந்து தனது தங்கையின் வயிற்றில் சுட்டுள்ளார். இதைப் பார்த்து பதற்றமடைந்த பெற்றோர்கள் சிறுமியை உடனடியாக ப்ரவேஷ் சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.

உடனடியாகக் கொண்டுசென்றதால், சிறுமியின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என டிசிபி வேத் பிரகாஷ் சூர்யா தெரிவித்துள்ளார். ஆனால் சிறுமியை கொலை செய்யமுயன்ற குற்றத்திற்காக அந்த இளைஞர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.