இந்தியா

ஜெகன் மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு தொண்டர்கள் பயங்கர மோதல்.. 16 பேர் படுகாயம்

JustinDurai

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசக் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலத்தில் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலையொட்டி ஆளுங்கட்சியான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் முடிவடைந்த மெட்டவலசா கிராம பஞ்சாயத்து தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு எதிராக ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசக் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு கூடியிருந்தவர்களைக் கலைத்தனர். இந்த மோதலில் 16 பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.