இந்தியா

மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்கள் மக்கள் ஊரடங்கு

Rasus

மகாராஷ்டிராவில் தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் இன்று இரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மக்களுக்கு உரை நிகழ்த்திய முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் தாங்களாகவே முன்வந்து முழு முடக்கத்தை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். முழுமுடக்க காலத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்ற அவர், இந்த 15 நாட்களில் 7 கோடி ஏழைகளுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் என்ற முதல்வர் உத்தவ் தாக்கரே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணிகளை கவனிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். முழு முடக்கத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தொடரும் என்றாலும் அவசியம் கருதி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். பெட்ரோல் பம்ப்புகள் செயல்படும் என்றும் மருத்துவ சேவைகளுக்கு முழுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

மக்கள் தாங்களாகவே முன்வந்து முழுமுடக்கத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவும், அத்தியாவசிய தேவையன்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவுக்கு அதிக அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்குமாறு மத்திய அரசுக்கும் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.