இந்தியா

பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 15 நாட்கள் அவகாசம்

பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 15 நாட்கள் அவகாசம்

Rasus

கர்நாடகா மாநில முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி மே 21-ஆம் தேதி பதவியேற்கிறார். பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது ராஜினாமா கடிதத்தையும் அளித்தார்.

இந்நிலையில் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலாவை இரவு 7.30 மணிக்கு சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாராசமி, “ கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மே 21-ஆம் தேதி நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து மாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும், சோனியா காந்திக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளேன். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோர் வாழ்த்து தெவித்துள்ளனர். மாயாவதியும் என்னை வாழ்த்தியுள்ளார்” என தெரிவித்தார்.