இந்தியா

ராஜஸ்தான்: சகோதரன் உட்பட 4 பேரால் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி!

Sinekadhara

ராஜஸ்தானில் சகோதரன் உட்பட 4 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமி, குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் நாகவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவரை ஜனானா மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். அங்கு திங்கட்கிழமை அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அந்தப் பெண் திருமணமாகாதவர் என்றும், பார்ப்பதற்கு சிறுமிபோல் இருந்ததாலும், மருத்துவர்கள், படுகலன் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி நரோட்டம் சிங்கிற்கு இதுகுறித்து தகவல் கொடுத்திருக்கின்றனர்.

மருத்துவமனைக்கு வந்த போலீஸார், பெற்றோர் மற்றும் உறவினரை விசாரித்ததில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி இருக்கிறது. அந்த சிறுமிக்கு 14 வயதுதான் ஆகிறது என்றும், சிறுமியின் சொந்த சகோதரரே அவரை பாலியல் வன்கொடுமைக்கு பலமுறை உட்படுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ளனர். அவர் தவிர அந்த கிராமத்திலுள்ள வேறு சிலரும் அந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் கூறியுள்ளனர்.

சிறுமிக்கு பிறந்த குழந்தை யாருடையது என்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். சிறுமி மற்றும் குழந்தை தற்போது காவல்துறை மற்றும் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ள நிலையில், குடும்பத்தினர், சகோதரன் மற்றும் அவர்கள் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.