இந்தியா

டெல்லி அமைச்சர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம், 133 தங்க நாணயங்கள் பறிமுதல்

JustinDurai

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளிலிருந்து ரூ.2.85 கோடி ரொக்கப்பணம் மற்றும் 133 தங்கக் காசுகளை பறிமுதல் செய்திருக்கின்றனர் அமலாக்கத்துறையினர்.  

ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.82 கோடி ரொக்கப் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பான புகைப்படங்களை அமலாக்கத்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஹவாலா பணப்பரிவா்த்தனை தொடர்பான வழக்கில் சத்யேந்தர ஜெயின் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் உள்ள நிலையில் அவரது வீட்டில் இந்த சோதனை நடந்துள்ளது. மேலும் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் ஆம் ஆத்மி அரசு பதவி விலக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. 

இதையும் படிக்கலாம்: ' தங்கக் கடத்தலில் தொடர்புடையவர்களை தோலுரித்துக் காட்டுவேன்' - ஸ்வப்னா சுரேஷ்