ஆந்திராவில் இன்று அதிகாலை, டிப்பர் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியதில் 14 பேர் பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலங்கானாவின் நிர்மலில் இருந்து ஆந்திர மாநிலம் ஹரிகிருஷ்ணா டிராவல்ஸுக்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து ஒன்று இன்று ஆந்திர மாநிலம் நெல்லூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. மார்காபுரம் மாவட்டம் ராயபுரம் கல்குவாரிகள் அருகே அப்பேருந்து சென்று கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்து தீப்பிடித்து எரிவதை அறிந்த பயணிகள் சிலர் பேருந்து கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு வெளியே குதித்து உயிர்தப்பிய நிலையில், 13 பேர் உயிருடன் பேருந்து தீயில் சிக்கி பலியாகினர். காயமடைந்த சுமார் 20 பயணிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நிதியுதவியையும் அறிவித்துள்ளார்; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
மீட்புக் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அனைத்து விவரங்களையும் உறுதிசெய்து, உரிய நடைமுறைகளை நிறைவுசெய்த பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு இந்தச் சம்பவம் குறித்து தனது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார். காயமடைந்த அனைவருக்கும் போதுமான மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவர் அதிகாரிகளிடம் பேசினார் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.