இந்தியா

அடித்து வீசிய 'Amphan' புயல் - மேற்கு வங்கத்தில் 12 பேர் உயிரிழப்பு?

webteam

வங்கக் கடலில் உருவான 'Amphan' புயலால் மேற்கு வங்கத்தில் 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த Amphan புயல் நேற்று வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. பின்னர் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 2.30 மணிக்கு திஹா - சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்கத் தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது.

இந்தப் புயலால் கொல்கத்தாவில் கடும் சூறாவளிக் காற்று வீசியது. 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன. கட்டடங்கள் சேதமாகின. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. 10 முதல் 12 பேர் வரை இந்த புயலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புயல் காரணமாக, மேற்கு வங்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் மற்றும் ஒடிசாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.