இந்தியா

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

webteam

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களில் 110 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. கடைசிக்கட்ட தேர்தல் நாளை  நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 716 பேரில் 110 பெண் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 78 பேர் மீது தீவிர மான குற்ற வழக்குகள் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 54 பேரில் 14 பேர், பாஜக வேட்பாளர்கள் 53 பேரில் 18 பேர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 24 பேரில் 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 23 பேரில் 6 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

இந்த தேர்தலில் 255 பெண் வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 44 பேர், பாஜக. வேட்பாளர்கள் 44 பேர், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 15 பேர், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 9 பேர் கோடீஸ்வர பெண்கள். இந்த தேர்தலில் பெண் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.5.63 கோடி. கடந்த தேர்தலில் இது 10.62 கோடியாக இருந்தது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள் ளது.