Maharashtra Bhushan Award ceremony
Maharashtra Bhushan Award ceremony PTI
இந்தியா

அமித்ஷா பங்கேற்ற விருது வழங்கும் விழாவில் வெயிலின் தாக்கத்தால் 11 பேர் மரணம்; மும்பையில் சோக நிகழ்வு

Kaleel Rahman

மகாராஷ்டிராவின் பிரபல சமூக சேவகர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு மாநிலத்தின் உயரிய விருது வழங்கும் விழா நவி மும்பையில் நடைபெற்றது.

இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு விருதை வழங்கினார். திறந்தவெளி மைதானத்தில் நடந்த இந்த விழாவிற்காக காலை முதல் மதியம் வரை சுமார் 5 மணிநேரம் லட்சக்கணக்கான மக்கள் காத்திருந்தனர்.

அப்போது வெயிலில் மணிக் கணக்கில் காத்திருந்தவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ள முதல்வர் ஷிண்டே, காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்தார்.

இதனிடையே எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அரசு தவறான நேரத்தை விருது வழங்கும் விழாவிற்கு தேர்வு செய்துவிட்டதாக அவர் விமர்சித்தனர். அரசின் கவனக்குறைவு காரணமாகவே இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சிவசேனாவின் உத்தவ் பாலசாகேப் தாக்கரே பிரிவின் தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபிகளை வரவேற்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும், மற்றவர்களை கண்டுகொள்ளவில்லை என்று சாடியுள்ள இரு தலைவர்களும், அரசு பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைப்பதாகவும் சாடியுள்ளனர்.