இந்தியா

ம.பி.யில் வேன் திரும்பும்போது விபத்து - 10 பேர் உயிரிழப்பு

Sinekadhara

மத்திய பிரதேசத்தில் ஒரு வேன் திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் ஷேவோபூர் மாவட்டத்தில் ஒரு ஆன்மிக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தோதி கிராமத்திலிருந்து உன்னவாத் கிராமத்திற்கு வேனில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஆன்மிக கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேன், மாலை 7.15 மணியளவில் ஷிவ்புரி மாவட்டத்திற்கு அருகே போஹ்ரி என்ற பகுதியில் திரும்பும்போது சரிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து ஷிவ்புரி காவல் அதிகாரி ராஜேஷ் சிங் சந்தேல் கூறுகையில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பி.டி.ஐ கொடுத்த தகவலில் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் துர்கா பாய்(28) என்ற கர்ப்பிணி பெண்ணும் அவருடைய 4 வயது மகள் ப்ரத்யா என்பவரும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரை மேல் சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுவரை பத்துபேர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.