இந்தியா

3 நாட்கள்.. 240 கி.மீ.. எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்து காருக்குள்ளே டேரா போட்ட ராஜநாகம்!

ச. முத்துகிருஷ்ணன்

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவரது காருக்குள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து சென்றதாக நம்பப்படுகிறது. அவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனைச் சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தபோது காருக்குள் பாம்பு ஏறியதைக் கண்டதாக சுஜித் தெரிவித்தார்.

ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க இயலவில்லை. பாம்பை வெளியே எடுக்க வனத்துறை அதிகாரிகளை அழைத்தார். அது என்ஜின் பேக்குள் நுழைந்து மற்றும் கார் பேட்டரிக்கு அருகில் அமர்ந்திருந்தது. பாம்பை மீட்க அதிகாரிகள் வந்தபோது, பாம்பு பேட்டரிக்கு அடியில் சிக்கியதால் அதை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதிகாரிகள் சுஜித்தை காரை ஸ்டார்ட் செய்யச் சொன்னார்கள், என்ஜின் அதிக வெப்பமடைந்தால், பாம்பு தானாகவே வெளியேறும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

எனவே அவர்கள் காரை அங்கேயே இரண்டு நாட்கள் நிறுத்தினார்கள். பாம்பு வெளியே வர நேரம் கொடுப்பதற்காக நிறுத்தச் சொன்னார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு, சுஜித் காரை ஒரு சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று, முழுவதுமாக சரிபார்க்க காரைத் தூக்கினார். அப்படியும் பாம்பு தென்படாததால் பாம்பு தானாகவே காரில் இருந்து இறங்கி வெளியே போயிருக்கும் என தனக்கு தானே நம்பிக்கை சொல்லிக்கொண்டு காரில் வழக்கம் போல பயணத்தை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார் சுஜித். பின் மீண்டும் 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் சுஜித்.

பாம்பு புகுந்த விஷயத்தை அவர் மறந்திருந்த வேளையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது காருக்குள் தொங்கிக் கொண்டிருந்த பாம்பின் தோலை கண்டபோது அவரும் அவரது குடும்பத்தினரும் பதட்டமடைந்தனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளிக்க, அவர்கள் நடத்திய சோதனையில் அந்த பாம்பு சிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை சுஜித் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அவரது நண்பர் வீட்டிலிருந்து 10 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சுஜித்திடம் பாம்பைக் காட்டிய வனத்துறையினர் அவர் காருக்குள் ஏறியதாகச் சொல்லப்பட்ட பாம்பு அதுதான் என்பதை உறுதிசெய்தனர். பாம்பை பாதுகாப்பான இடத்தில் விடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாம்பு புகுந்ததாக சொல்லப்படும் நாள் முதல் 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணித்துவிட்டதாக சுஜித் அச்சத்துடன் தெரிவித்தார். பொதுவாக அரச நாகப்பாம்புகள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பாம்பு இருப்பது அப்பகுதி மக்களிடையே ஆர்வத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.