கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர், 10 மீனவர்களை படகோடு சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை, கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே, இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துவிட்டு, கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கான்ஸ் என்பவர் படகை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நிறுத்தச் செய்துள்ளனர். பின்னர், படகிலிருந்த மீனவர்கள் 10 பேரையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இவர்கள் அனைவரும், காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்ட படகிலிருந்த மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.