இந்தியா

இமாச்சல் பிரதேசத்தில் மீண்டும் கனமழை: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 பேர் பலி

Veeramani

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சலப் பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையம் (HPDMA) தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் தற்போதுவரை இமாச்சலில் 432 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சலப் பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கனமழை பாதிப்பு காரணமாக 130 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், பல வீடுகள், கால்நடை கொட்டகைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.  

ஜூன் 13 முதல் அரசுக்கு மழை பாதிப்புகள் காரணமாக 1,108 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 857 வீடுகளும், 700 கால்நடை கொட்டகைகளும் சேதமடைந்துள்ளதாகவும் இமாச்சலப் பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது.