இந்தியா

"தோற்றவர்களின் பேச்சை கேட்கவேண்டிய அவசியம் இல்லை" - பாகிஸ்தானிடம் பாய்ந்த இந்தியா

Veeramani

தோற்றுப்போன ஒரு நாட்டின் பேச்சை கேட்க வேண்டும் என்ற அவசியம் தங்களுக்கு இல்லை என பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பாகிஸ்தானும் O.I.C.எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பின. இதற்கு இந்திய தரப்பில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அதிகாரியான பவன் பாதே கடுமையான வார்த்தைகளால் பதிலடி தந்தார். பாகிஸ்தான் ஒரு தோற்றுப்போன நாடு என்றும் மனித உரிமைகள் மிக மோசமான வகையில் மீறப்படும் நாடு என்றும் அப்படிப்பட்ட நாட்டின் பேச்சுகளை செவிமடுக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை என்றும் பவன் பாதே காட்டமாக குறிப்பிட்டார். O.I.C.அமைப்பு பாகிஸ்தானிடம் பணயக்கைதி போல் சிக்கியிருப்பதால் வேறு வழியின்றி அந்நாட்டிற்கு ஆதரவாக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அதிகாரி சாடினார்.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்து பயிற்சியும் ஆயுதமும் கொடுத்து பிற நாடுகளுக்கு அனுப்பும் நாடு பாகிஸ்தான் என்பது உலகுக்கே தெரிந்த விஷயம் என்றும் அதிகாரி பவன் பாதே விமர்சித்தார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று திட்டவட்டமாக குறிப்பிட்ட பவன் பாதே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் O.I.C.தலையிடுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் சாடினார். பாகிஸ்தானை ஆதரிப்பது சரிதானா என்பதை O.I.C நாடுகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும் இந்திய அதிகாரி பவன் பாதே குறிப்பிட்டார்.