இந்தியா

‘சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துங்கள்’ - நீதிபதி நாரிமன் அறிவுறுத்தல்

webteam

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைபிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் ஃபாலி நாரிமன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கினை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உத்தரவுக்கு தடை ஏதும் பிறப்பிக்கப்படாத நிலையில், அந்த உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், மற்றொரு வழக்கில் ஆஜராகிய மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம், சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவை முறையாக அமல்படுத்த நீதிபதி பாலி‌ நாரிமன் வலியுறுத்தினார். 

உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கண்டிப்புடன் தெரிவித்தார். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்கும்படி மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம், நீதிபதி ஃபாலி நாரிமன் அறிவுறுத்தினார்.  

வாதங்கள் முடிந்து தீர்ப்பு வெளியான பிறகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடியது என்றும், தீர்ப்பை மீறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதி நாரிமனும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.