ராஜஸ்தான் பாடப்புத்தகத்தில் சவார்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
பாடப்புத்தகங்களை மறுவரையறை செய்வதற்காக ராஜஸ்தான் கல்வித்துறை புதிய கமிட்டி ஒன்றினை அமைத்து இருந்தது. இந்தக் கமிட்டி பாடப்புத்தகங்களில் உள்ள பல்வேறு தகவல்களை திருத்தம் செய்தது. அதில், ஒன்றுதான் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் சவார்கர் குறித்த தகவல்களை திருத்தம் செய்ததும்.
பாஜக தலைமையிலான அரசு கடந்த ஆட்சியில் சவார்கர் குறித்த தகவலை பாடப்புத்தகத்தில் சேர்த்தது. அதில் திருத்தம் செய்த தற்போதையை கமிட்டி சவார்கரை ‘போர்ச்சுகலின் மைந்தன்’ (Son of Portugal) என்று குறிப்பிட்டுள்ளது. 1910-11 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அரசின் ஆவணங்களின் படி இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் உள்ளது. அதேபோல், வீர் சவார்கர் என்று இருந்ததில் வீர் என்பதை நீக்கிவிட்டது.
இந்தத் திருத்தங்களுக்கு ராஜஸ்தான் முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சவார்களை தேசப்பற்று கொண்டவராக ஏற்றுக் கொண்டதாகவும், அவர் குறித்து ஆவணப்படம் எடுக்க தன்னுடைய சொந்தப்பணம் ரூ11 ஆயிரத்தை கொடுத்ததாகவும் வாசுதேவ் குறிப்பிட்டுள்ளார். மேலும், சுதந்திர போராட்ட வீரரை போர்ச்சுகலின் மைந்தன் என அழைப்பது அவரை அவமதிக்கும் செயல் என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தோதாசரா, “நான் என்ன சொல்ல முடியும்?. ஆய்வாளர்களின் கமிட்டி அளித்த பரிந்துரையின்படிதான் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. கல்வியாளர்களின் பரிந்துரையின் படிதான் அந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளது என்பதைதான் என்னால் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.
சவார்கர் குறித்து இந்தத் தகவலுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் சிலர் அதிருப்தியை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.