இந்தியா

மேதா பட்கரின் 9 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

webteam

சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக ஆர்வலர் மேதா பட்கர், தனது உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார்.

குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை 138.68 அடியாக உயர்த்தும் மாநில அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர் மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு ஆதரவாக அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அந்த அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், 192 கிராமங்களும் அங்கு வசிக்கும் 32 ஆயிரம் குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வந்தது.

9 நாட்களாக நடந்து வந்த இந்த போராட்டத்தால், மேதா பட்கரின் உடல் நிலை மோசமானது. இந்த விவகாரத்தில் அரசு உடனே தலையிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருந்தது. அந்த கட்சியின் மாநிலங்களவை எம்.பி,பினாய் விஸ்வம் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியி ருந்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், முன்னாள் செயலாளரான எஸ்.சி. பெஹார் என்பவரை பட்கரிடம் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவர் நேற்றிரவு மேதா பட்கரை சந்தித்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கேட்டுக்கொண்டார். அணையின் நீர்மட்ட அளவை குறைப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பட்கருக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அவருடன் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.