இந்தியா

'தடுப்பூசி இல்லையென்றால், சம்பளமும் இல்லை': ஊழியர்களுக்கு அறிவித்த உ.பி. மாவட்ட நிர்வாகம்

நிவேதா ஜெகராஜா

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்தியாவில் பல மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் பிரோசாபாத் மாவட்ட நிர்வாகம், இன்றைய தினம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதுதான் – ‘தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாது’.

அம்மாநிலத்தின் தலைமை மேம்பாட்டு அதிகாரியான சார்சித் கௌர் கூறும்போது, அம்மாவட்ட மாஜிஸ்ட்ரேட்  சந்த்ரா விஜய் சிங் இந்த அறிவிப்பை அறிக்கையின்றி இப்போதைக்கு அறிவித்திருக்கிறார் என கூறியுள்ளார். அந்தவகையில் சந்த்ரா விஜய் சிங் கூறியது, ‘தடுப்பூசி இல்லையென்றால், சம்பளமும் இல்லை’ எனக்கூறியுள்ளார்.

இதன்படி, மே மாத சம்பளத்திலிருந்தே சம்பளப் பிடிமானம் செய்யப்படும் என சார்சித் கௌர் கூறியுள்ளார்.

அவரின் ஆணைக்கிணங்க, மாவட்ட கருவூல அதிகாரி மற்றும் பிற துறை தலைவர்கள், அவர்களின் கீழ் இயங்கும் பணியாளர்களுக்கு இதுபற்றி அறிவித்துள்ளனர். அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பளம் நிறுத்தப்பட்டுவிடுமோ என்ற பயம் காரணமாக, அனைவரும் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதாக கூறப்பட்டுள்ளனர்.

முன்னராக ஏற்கெனவே எடவாக் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்ய வேண்டாம் என அம்மாவட்ட நிர்வாகத்தினர அறிவுறுத்தியிருந்தனர். இதுபற்றி அப்பகுதியின் வட்டார அதிகாரியான ஹேம் சிங் கூறுகையில், ‘45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டையை காட்டினால் மட்டுமே, அவர்களுக்கு மது வழங்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.